எஸ்.பி.பி.யின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

எஸ்.பி.பி.யின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் என மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்மோ கருவி பொருத்தி எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 5-ம் தேதி முன்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலரும் தொலைபேசியில் அழைத்ததால், உடனடியாக ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனக்கு லேசான கொரோனா தொற்று தான் எனவும் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் இன்னும் இரண்டு நாட்களில் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்று அந்த வீடியோ பதிவில் பேசியிருந்தார் எஸ்.பி.பி.

இதனிடையே இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா வைரஸ் நோய் அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணர்கள் குழுவின் அறிவுரைகளின்படி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது உயிர்காக்கும் கருவிகளுடன் இருந்து வரும் அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளது.

இவர் தற்போது மருத்துவ நிபுணர்களின் தீவிர சிகிச்சைக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல் உறுப்புகளிடையே மற்றும் திசுக்களிடையே ரத்த ஓட்ட இயக்கமான ஹீமோடைனமிக் மற்றும் பிற உடல்நிலை மருத்துவ அளவுகோல்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *