அப்பா முழுவதும் குணமடைய நீண்ட காலம் ஆகும் சரண் தெரிவிப்பு!

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தில் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்படுவதாக அவரது மகன் சரண் வெளியிட்ட புதிய காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்தக் காணொளியில் எஸ்பிபியின் தற்போதைய நிலை குறித்து சரண் விரிவாக விளக்கியுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனிப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு பாலசுப்பிரமணியம் மாற்றப்பட்டுள்ளதாகவும், தனக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களை அவரால் அடையாளம் காண முடிகிறது என்றும் அதில் சரண் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வென்டிலேட்டரில் இருக்கும் அவர், சிறிது நாட்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது மூச்சுவிடுவதிலிருந்த சிரமம் சற்று குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இதனை நல்ல முன்னேற்றமாக மருத்துவர்கள் பார்க்கிறார்கள். அப்பா முழுவதும் குணமடைய நீண்ட காலம் ஆகும். அதற்கான சிறப்பான முயற்சிகளை மருத்துவக்குழுவினர் எடுத்து வருகின்றனர். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் முழுவதுமாக குணமடைந்து நம்மிடம் திரும்புவார். தற்போது அவர் முழு மயக்கத்தில் இல்லை. தன்னை சுற்றி இருப்பவர்களை அப்பாவால் அடையாளம் காண முடிகிறது. அவரால் சிறிது காலத்திற்குப் பேச முடியாது. ஆனால், விரைவில் பேசும் நிலைக்கு திரும்புவார்” என்று சரண் அந்தக் காணொளியில் கூறியுள்ளார்.
“என் தாயின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அவர் வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமையன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். என் தந்தையும் அவரை பின்தொடர்ந்து வீடு திரும்புவார்” எனக்கூறியுள்ளார்.அவரது உடல்நலத்திற்காக நாம் பிரார்த்திப்போம். உங்கள் அன்புக்கும், அக்கறைக்கும் என் குடும்பம் கடமைப்பட்டிருக்கிறது என்று பேசிய சரண், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது தாயின் உடல்நலம் குறித்தும் அந்தக் காணொளியில் விளக்கியுள்ளார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கோவிட் – 19 அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

கோவிட் – 19 பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், தான் நலமுடன் இருப்பதாகவும் யாரும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க வேண்டாமென்றும் கூறியிருந்தார்.

ஆந்திர மாநிலம், நெல்லூரில் பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். அவருக்கு வயது 74.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *