சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு !
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று 1929 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாகக் கருதிக் கொள்ளுங்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த தோனி? எப்படி ஆரம்பித்தது பயணம்?
1981-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி ராஞ்சியில் பிறந்த தோனி, இளம் வயதில் அதிகம் விளையாடியது கால்பந்து மற்றும் பாட்மிண்டன் ஆகியவையே.
தோனி படித்த பள்ளியின் கிரிக்கெட் அணியில் வழக்கமாக விளையாடும் விக்கெட் கீப்பர் ஒரு போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட, அந்த போட்டியில் தோனி விக்கெட் கீப்பராக விளையாடினார். அப்படி ஆரம்பித்ததே அவரது கிரிக்கெட் வாழ்க்கை.
பள்ளியில் விளையாடும்போது தோனியின் பேட்டிங்கிற்கும், அவரது பிரத்தியேக ஷாட்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
மிகவும் சாதாரணமான பின்னணியில் பிறந்து வளர்ந்த தோனிக்கு சர்வதேச கிரிக்கெட் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடவில்லை.
சிசிஎல், பிகார், ஜார்க்கண்ட் இந்தியா ஏ, கிழக்கு மண்டலம் என பல அணிகளில் விளையாடிய தோனியின் பெயர், 2000 முதல் இந்தியா மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிகளில் இடம்பெற வாய்ப்புள்ளவர்கள் குறித்த செய்திகளில் தொடர்ந்து இடம்பெற்றது.
சச்சின் – தோனி : என்ன ஒற்றுமை?
ஆனால் 2004 டிசம்பரில் தான், இந்தியாவுக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் தோனியால் விளையாட முடிந்தது. அந்த போட்டியில் நடந்தது என்ன தெரியுமா?
கிரிக்கெட் ஜாம்பவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கருக்கும், தோனிக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக சிறந்த வீரர்களாக கருதப்படும் இவர்கள் இருவரும் தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர்.
வங்கதேச அணிக்கு எதிராக 20004-இல் நடந்த தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் தோனி வெளியேறினார்.
எனினும் இவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து சில வாய்ப்புகளை அணித்தலைவர் கங்குலி அளித்தார். 2005-இல் விசாகப்பட்டினத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி 148 ரன்கள் குவித்து கவனம் பெற்றார்.
அதே ஆண்டில் இலங்கையுடன் நடந்த போட்டியில் 183 ரன்களை எடுத்த தோனி அணியில் தனது இடத்தை மேலும் வலுவாக்கினார்.
ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, 2007 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய காலகட்டத்தில் தோனி உள்பட பல இந்திய வீரர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
அந்த ஆண்டில் நடந்த முதல் டி20 உலக கோப்பை தொடரில், டிராவிட், சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் விளையாடாத நிலையில், இளம் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்றது தோனிக்கு அதிக பாராட்டுகளை பெற்றுத் தந்தது.
2007 டி20 மற்றும் 2011 ஐசிசி உலக கோப்பைகளை தோனியின் தலைமையில் இந்தியா வென்றுள்ளது அவரது தலைமைக்குப் பாராட்டுகளை தந்தது.
2013 ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. .2010 மற்றும் 2016 ஆகிய இருமுறைகள் இந்தியா ஆசிய கோப்பையை வென்றதும் இவரது தலைமையில் தான்.
இவை ஒருபுறமிக்க, உலக அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஐபிஎல் தொடர்களிலும் தோனியின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் வெகுவாக புகழப்பட்டது.
2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஐபிஎல் தொடர்களை அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வென்றது.சென்னை மற்றும் தமிழகத்தில் தோனிக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.