டிசம்பர் வரை பாடசாலைகள் திறக்க வாய்ப்பில்லை!
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து கேள்விகளும் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பல பள்ளிகளில் ஆன்-லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறைச் செயலாளர் அமித் கரே கலந்துகொண்டார். அப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையின்போது பேசிய செயலர் அமித் கரே, “கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால், தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதனால் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பில்லை” என கூட்டத்தில் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.