அன்பளிப்பாக எதையும் ஏற்றுக் கொள்ளாத அப்துல் கலாம்!

இந்தியாவில் ஈரோட்டில் அப்துல் கலாம் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி…. விழா மேடையில்…
அப்துல் கலாமுக்கு நினைவுப் பரிசாக , ஒரு வெட் கிரைண்டரை அந்த கம்பெனிக்காரர்கள் வழங்கி மகிழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

அன்பளிப்பாக எதையும் ஏற்றுக் கொள்ளாத உறுதியான குணம் கலாமுக்கு உண்டு.
ஆனால், சொந்த உபயோகத்துக்கு ஒரு கிரைண்டரும் அவருக்கு தேவைப்பட்ட நேரம் அது.
பார்த்தார் அப்துல் கலாம். கிரைண்டரை வாங்கிக் கொள்ள முடிவு செய்து விட்டார்.
ஆனால் … கலாம் போட்ட ஒரு கண்டிஷன்: “இந்த கிரைண்டருக்கு உண்டான விலையை நீங்கள் வாங்கிக் கொண்டால் மட்டுமே , இந்த கிரைண்டரை நான் வாங்கிக் கொள்ள முடியும்.”

பரிசாகக் கொடுக்க முடியவில்லையே என்று கம்பெனிக்காரர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். சரி. பரவாயில்லை.

“4 ஆயிரத்து 850 ரூபாய்” என்று கிரைண்டரின் விலையைச் சொன்னார்கள்.
அடுத்த நொடியே 4 ஆயிரத்து 850 ரூபாய்க்கான செக்கும், கிரைண்டரும் கை மாறின.

ஆனால், அடுத்து நடந்தது அப்துல் கலாம் எதிர்பாராதது.
அந்த கிரைண்டர் கம்பெனி, அவர் கொடுத்த செக்கை வங்கியில் செலுத்தி பணம் எடுக்கவே இல்லை.
‘அப்துல் கலாம்’ என்ற அபூர்வ மனிதர் கையெழுத்து போட்ட அந்த செக்கை, அரிய பொக்கிஷமாக நினைத்து பத்திரப்படுத்திக் கொண்டு விட்டார்கள்.
இரண்டு மாதங்களாகியும் கலாமின் கணக்கில் இருந்து, பணத்தை எடுக்கவே இல்லை.

இது கலாம் கவனத்துக்கு வந்தது.
அடுத்த நிமிடம் அப்துல் கலாம் அலுவலகத்திலிருந்து, அந்த கிரைண்டர் கம்பெனிக்கு போன் வந்தது.

“உடனடியாக செக்கை வங்கியில் செலுத்தி, கிரைண்டருக்கான பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது…”

“அல்லது..?”

“நீங்கள் கொடுத்த அந்த கிரைண்டர் உடனடியாக உங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும்…”

அப்துல் கலாமின் இந்த அதிரடி அன்பு மிரட்டலை, அந்த கிரைண்டர் கம்பெனி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
உடனடியாக செக்கை வங்கியில் செலுத்தி பணத்தை எடுத்துக் கொண்டார்கள்.
அதற்குப் பின்னரே மனம் நிம்மதியானது அப்துல் கலாமுக்கு!

எப்பேர்ப்பட்ட ஒரு உன்னத மனிதர் அப்துல் கலாம்..?

இப்படி ஒரு மனிதரை, எதிர்வரும் காலங்களில் இனி பார்க்க முடியுமா?

நன்றி: முகநூல் பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *