ரணில் சவப்பெட்டியை தயார்செய்கிறார் சஜித் அணி தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் தங்களுக்கான சவப்பெட்டிகளை தாங்களே தயார்படுத்திக்கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ள ரணில் அணியினர் இன்று சஜித் பிரேமதாஸ அணியினர் மீது சேறுபூசும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.

இங்கு உரையாற்றிய அவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கடுமையான விமர்சித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ரவி கருணாநாயக்கவும் ராஜபக்ச அணியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு எதிராக சேறுபூசும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக நடத்திவருகின்றனர். ராஜபக்சவின் கொந்தராத்துக்களை ஏற்றுக்கொண்டுள்ள ரணில் அணியினர் சஜித் அணியினர் மீது இவ்வாறு போலிப்பிரசாரங்களை செய்து வருகின்றனர். இறுதியில் ரணில், அக்கிலவிராஜ், ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன ஆகியோர் தங்களுக்கு அவசியமான பிரேதப் பெட்டிகளை தயார்செய்து வருகின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *