பத்து வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை!!
புத்தளம் – ஆசிரிகம பிரதேசத்தில் பாம்பு தீண்டியதாக கூறி தாயினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு, அதிக இரத்த போக்கு ஏற்பட்டமையினால் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் வெளியாகியுள்ளது.
சிறுமியின் மரணம் தொடர்பில் வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாம்பு தீண்டியதாக கூறி, 10 வயது மகளை தாய் நேற்று முன்தினம் காலை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்தார். எனினும் சிறுமி உயிரிழந்துள்ளார்.
அவரின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய பொலிஸார் சிறுமியின் வீட்டை பரிசோதனை செய்துள்ளனர்.
அங்கு இரத்தம் படிந்த பல ஆடைகள் பல இடங்களில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாயாரின் இரண்டாவது கணவரினால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் அந்தப் பிரதேசத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். போலியான தகவல் வெளியிட்டு மகளை வைத்தியசாலையில் அனுமதித்தமை தொடர்பில் தாய்க்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நீர்கொழும்பு – பெரியமுல்ல பிரதேச ஹோட்டல் கழிப்பறையில் ஒரு வயதும் 4 மாதங்களும் வயதுடைய குழந்தை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மற்றும் குழந்தையின் தாயார் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
24 வயதுடைய தாயின் கள்ள காதலினால் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் யாசகர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.