கோட்டா-மஹிந்த அரசை இராஜினாமா செய்யும்படி ஆர்ப்பாட்டம்!
சிங்கள பௌத்த மக்களின் ஆணையை பெற்று மலையகம் உட்பட தமிழ் மக்களின் உரிமைகளை நிராகரித்து அடக்கியாளும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக காணாமல் போனோரை தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோட்டா-மஹிந்த தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் செய்த முயற்சிக்கு எதிராக எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தகுந்தபாடம் புகட்டவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மஹிந்த-கோட்டாபய தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்த ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் பகல் நடைபெற்றது.
பொருட்கள் சேவைகளின் விலைகளை குறைக்குமாறும், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அரச ஊழியர்களின் கொடுப்பனவு என்பவற்றை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தும் பதாதைகளும் ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தினிடையே காணாமல் போனோரை தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரச தாதியர் மருத்துவச் சங்கத்தின் தலைவருமான சமன் ரத்னப்பிரிய, ஆட்சியை புரிவதற்கு முடியாவிட்டால் மஹிந்தவும், கோட்டாபயவும் இராஜினாமா செய்து வீடு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கோட்டா-மஹிந்த அரசாங்கம் இந்தியாவின் கைபொம்மையாகவும் செயற்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.