ரவி கருணாநாயக்கவின் பிடியாணை இடைநிறுத்தம்!
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க உட்பட ஏழு பேருக்கு, கொழும்பு கோட்டை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிடியாணை உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறை மோசடி தொடர்பில் ரூபா 52 பில்லியனுக்கும் அதிகமான நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரை கைது செய்யுமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் குறித்த நபர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, சோபித ராஜகருணா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த இடைநிறுத்தல் உத்தரவு வழங்ப்பட்டது.
குறித்த மனு விசாரணை நிறைவடையும் வரை இவ்விடைக்கால் தடை அமுலில் இருக்கும் என, நீதிபதிகள் குழு அறிவித்தது.
அதுவரை, ரவி கருணநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை பிறப்பிப்பதைத் தவிர்க்குமாறு நீதிபதிகள் குழாமினால், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு உத்தரவிடப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த உத்தரவுகள் மூலம் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான விசாரணையில் எவ்வித தலையீடுகளும் இருக்காது என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளது.
இம்மனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின், இன்று முதல் ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு வழக்கின் அனைத்து தரப்பினருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.