கருணாவை எவ்வாறு பிரித்தெடுத்தோம் ரணில் கூறும் விளக்கம்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற சமாதான காலப்பகுதியில் விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்து உபாய முறையாக பயன்படுத்தினோம். அதற்காக அவருக்கு கட்சியில் உப தவிசாளர் பதவியினையோ அமைச்சு பதவியினையோ வழங்கி உள்வாங்க வில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி முக்கிய உறுப்பினர்கள் பலர் இன்று தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அவரது இல்லத்தில் சந்தித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர். இதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில்,

தற்போதைய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்று 8 மாதங்கள் கடந்துள்ளது. ஆனால் எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் முன்னெடுக்க முடியாமல் போனது.

கொவிட்-19 வைரஸ் தொற்று இறுதி மூன்று மாதத்திலேயே நாட்டில் பரவியது. எஞ்சிய 5 மாதங்கள் அரசாங்கம் என்ன செய்தது. நாம் முன்னெடுத்த மக்கள் நல நிவாரணங்கள் திட்டத்தை கூட அரசாங்கம் வழங்க வில்லை. இதனூடாக அரசாங்கத்தின் பொருளாதார இயலாமையே வெளிப்படுகின்றது.

ஓரிரவில் மூவாயிரம் படையினரை கொன்று குவித்ததாக கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை பாதுகாக்கவே இவ்வாறானதொரு கருத்தினை தெரிவித்துள்ளார். இதனால் இராணுவ குடும்பங்கள் குழப்பமடைந்துள்ளன.

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் போது விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்தோம்.

இதன் பின்னர் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக கருணாவை உபாய முறையாக பயன்படுத்தினோம். அதற்காக அவருக்கு ஐக்கிய தேசிய கட்சியில் உப தவிசாளர் பதவியினையோ அமைச்சு பதவியினையோ வழங்கி உள்வாங்க வில்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *