புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற ஆயிரம் பேருக்கு மாத்திரம் அனுமதி!

2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை 1000 ஆக மட்டுப்படுத்தியுள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்முறை ஹஜ் யாத்திரைக்கு வெளிநாடுகளிலிருந்து எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் சவூதியில் வசிப்பவர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும் என்றும் சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சு ஏலவே அறிவித்திருந்தது.
இந் நிலையிலேயே இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் முஹம்மத் பெந்தன், இவ்வருடம் சமூக இடைவெளி பேணியும் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியும் 1000 பேர் மட்டுமே ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவர் எனக் குறிப்பிட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்கமாக வருடாந்தம் சுமார் 3 மில்லியன் மக்கள் ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் நிலையில், இவ்வருடம் கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவ்வெண்ணிக்கை 1000 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் இதுவரை 161,000 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு வார காலமாக சவூதியில் கொவிட் 19 தொற்று அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *