போலியான தகவல் கொடுத்த 277 கொரோனா நோயாளிகள் மாயம்!
கொரோனா தொற்று உறுதியான 277 நோயாளிகளை காணவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் அவர்களை கண்டறியும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், அதிகபட்சமாக சென்னை தான் முதலிடத்தில் உள்ளது. தற்போது, வரை சென்னையில் மட்டும் 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ெசன்னையில் கொரோனா நோய் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்காக வருவது அதிகரித்து வருகிறது. பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் வீட்டு முகவரி, தொலைபேசி எண்களை மருத்துவமனை நிர்வாகம் பெறுகிறது.
அவ்வாறு பரிசோதனைக்கு வரும் நபர்களின் முடிவுகளின் விவரங்களை அதாவது, பாசிட்டிவ், நெகட்டிவ் தகவல்கள் முழுவதையும் சென்னை மாநகராட்சிக்கு சுகாதாரத்துறை சார்பில் தகவல் அளிக்கிறது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்றால் மாநகராட்சி சார்பில் எந்த வித தகவலும் தெரிவிப்பதில்லை. அதே நேரத்தில் பாசிட்டிவ் வந்தால் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தகவல் அளிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது வீடுகளில் ெகாரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதி என்று பேனர் வைத்து, அந்த வீடுகளில் மற்றவர்கள் யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக, அந்த வீடு மூடப்படுகிறது. இதனால், பாிசோதனைக்கு வரும் நபர்கள் சில நேரங்களில் சரியான தகவல் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
அவர்கள், வீட்டை மூடி விடுவார்களோ என்ற பயத்திலும், அந்த பகுதியில் உள்ளவர்கள் தவறாக நினைப்பார்களோ என்ற அச்சத்திலும் அவர்கள், வீட்டின் முகவரி, தொலைபேசி எண்ணை மாற்றி கொடுத்து வருகின்றனர். இந்த மாதிரியான நேரங்களில், பாசிட்டிவ் வரும் நபர்களின் வீடு தேடி மாநகராட்சி சுகாதாரத்துறையினர் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்று, கடந்த மே 23ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதி வரை 277 பேரை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பாசிட்டிவ் இருப்பதால், அவர்களது குடும்பத்தினர் மட்டுமின்றி அவர்கள் தொடர்பில் இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இது தொடர்பாக, மாநகராட்சி சார்பில் கண்டுபிடிக்க முடியாத 277 பேரின் பட்டியலை போலீசாருக்கு அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள், மாநகராட்சி அளித்த பட்டியலை கொண்டு சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அவர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரப்பும் ஸ்லீப்பர் செல்கள்
கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்த நபர்கள் பலர் கடந்த 1 மாதங்களாக வெளியில் நடமாடி வருகின்றனர். அவர்கள் விவரங்கள் இல்லாததால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களால் சென்னை மாநகரில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்க வாய்ப்புள்ளது. இது, பொதுமக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வருங்காலங்களில் ெகாரோனா பரிசோதனைக்கு வருபவர்களின் முழு விவரங்களை பெற்றுக்கொண்டு அந்த விவரங்கள் சரிதானா என்பது குறித்து மாநகராட்சி ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….