இலங்கையில் சில வாரங்களில் கொரோனா பரவும் அபாயம்!

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் அதிகமானவர்கள் செயற்பட்டு வருகின்றனர். ஒருசிலரின் பொறுப்பற்ற இந்த செயலால் கொரோனா இரண்டாம் கற்ற அலையும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.

அத்துடன் இந்தியாவில் இந்த நோய் வேகமாக பரவி வருவதால் இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

கொரோனா தொற்று எச்சரிக்கை பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் வராதநிலையில் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்படுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் கொரோனா தொற்று தாக்கம் குறைவடைந்துவரும் நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

என்றாலும் கொரோனா தொற்றுக்கான அச்சுறுத்தல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் மக்கள் பொது இடங்களில் நடமாடும்போது பின்பற்றவேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. என்றாலும் பெரும்பாலானவர்கள் இதனை மறந்து செயற்படுகின்றனர்.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை வர்த்தமானிப்படுத்துமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம். என்றாலும் இதுவரை அது இடம்பெறவில்லை. முகக்கவசங்களை பயன்படுத்திவிட்டு கண்ட இடங்களில் கைவிட்டுச்செல்கின்றனர்.

இது மிகவும் ஆபத்தான விடயமாகும். இவற்றை துப்புரவு செய்யும் பணியாளர்கள் எடுத்துச்செல்கின்றனர். அவர்களுக்கு கொரோனா தொற்றும் அபாயம் இருக்கின்றது.

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை குப்பை தொட்டிகளில் போடுவதில்லை. ஒருசிலரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் இன்னும் சில வாரங்களில் கொரோனா இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் இருக்கின்றது.

அத்துடன் எமது அண்டை நாடான இந்தியாவில் கொரோனா நோய் பரவல் தீவிரமடைந்து வருகின்றது. இந்தியாவில் இருந்து கடற்தொழிலாளர்கள் மற்றும் நாடு கடந்து வாழ்பவர்கள் படகுகள் ஊடாக எமது நாட்டுக்குள் வருகின்றனர்.

இதில் கொரோனா தொற்றாளர்களும் இருக்கலாம். அதனால் எமது கடல் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *