நான் கடந்த 25 வருட காலம் வரைபடங்களுடன் போராட்ட காலங்களில் நடமாடியவன்!

மட்டு. அம்பாறை மாவட்டத்திற்கான எல்லை எனக்கு தெரியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கூறுவது வேடிக்கையான விடயமாகும். ஏனெனில் அவருக்கு வரைபட அறிவு இல்லை. நாங்கள் கடந்த 25 வருட காலம் வரைபடங்களுடன் போராட்ட காலங்களில் நடமாடியவர்கள். கோடீஸ்வரனின் கருத்தை ஒரு அறிவற்ற கருத்தாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான (கருணா அம்மான்) விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் நேற்று முன்திம் (11) மாலை கல்முனை, கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்த கருத்தில், தேர்தல்கள் காலம் வரும்போது பல விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொள்வார்கள். அதனையே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் செய்துள்ளார். மட்டு. அம்பாறை மாவட்டத்திற்கான எல்லை எனக்கு தெரியாது என அவர் கூறுவது வேடிக்கையான விடயம். ஏனெனில் அவருக்கு வரைபட அறிவு இல்லை .கடந்த 25 வருட காலம் வரைபடங்களுடன் நடமாடியவர்கள் நாங்கள் என்பது மக்களுக்கு தெரியும்.எனவே கோடீஸ்வரனின் கருத்தை ஒரு அறிவற்ற கருத்தாகவே நாங்கள் பார்க்கின்றோம்

நாங்கள் இவர் போன்று அநாகரிகமான அரசியலை செய்ய விரும்பவில்லை. அவர்களை குற்றம் சுமத்துவதற்கு கூட விரும்பவில்லை. மக்கள் விழிப்படைந்திருக்கிறார்கள், எங்களது நோக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அம்பாறை மாவட்டம் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் கூடுதலாக வாழ்கின்ற மாவட்டமாகும்.அவர்களது வாழ்க்கை சுமையை குறைக்க நாங்கள் தற்போது களமிறங்கி இருக்கின்றோம்.எனவே நாம் முன் வைத்த காலை ஒருபோதும் பின் வைக்க போவதில்லை நிச்சயமாக வெற்றி பெற்று சேவையாற்றுவோம் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *