பாராளுமன்ற அரசியலில் இருந்து விடைபெற்றார் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர
பாராளுமன்ற அரசியலில் இருந்து விடைபெறபோவதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
எனவே, பொதுத்தேர்தலில் தனக்கான விருப்பு வாக்கை வழங்கவேண்டாம் என்று மாத்தறை மாவட்ட மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மாத்தறை மாவட்டத்திலுள்ள தமது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர் இந்த முடிவை அறிவித்தார்.
அத்துடன், பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவது தொடர்பான தனது முடிவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் மங்கள சமரவீர கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
2020 ஆகஸ்ட் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் மங்கள சமரவீர போட்டியிடவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் இருந்து விலகினாலும் செயற்பாட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. புதிய அரசியல் பயணத்துக்கு மாத்தறை மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றேன் எனவும் கூறினார்.