கொரோனாவால் முத்தக் காட்சிகளில் நடிக்க தயங்கும் நடிகை
சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா, சர்வர் சுந்தரம், ஜெய்யுடன் கேப்மாரி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர், வைபவி சாண்டில்யா. குடும்பப்பாங்காகவும் நடிப்பார் என்றாலும், கிளாமர் விஷயத்தில் எள் என்றால் எண்ணெய்யாக மாறிவிடுவார். ஆனால், அவ்வளவு துணிச்சலானவரே இப்போது கொரோனா தொற்று பயத்தில் ஏதேதோ புலம்பியிருக்கிறார். அதாவது, இனிமேல் சினிமா படப்பிடிப்பு தொடங்கப்பட்டால், தனக்கு மேக்கப் பூசுவது, டச்அப் செய்வது மற்றும் காஸ்ட்யூமர், ஹேர் டிரெஸ்சர், உதவியாளர்கள் என, அனைவருடனும் இணைந்து பணிபுரிய வேண்டியிருக்கும். அப்போது சமூக இடைவெளி இருக்குமா என்பது சந்தேகம்தான் என்று ஒரு பேட்டியில் சொல்லி கவலைப்பட்டிருக்கிறார். மேலும், “சினிமா படங்களில் காதல் காட்சிகள் மற்றும் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும். கதைப்படி இதை யாராலும் தவிர்க்க முடியாது. மேலும், பாடல் காட்சிகளில் ஒருவரது முகத்தை இன்னொருவருக்கு அருகில் கொண்டு சென்று, முத்தமிடுவது போல் பாசாங்கு செய்து நடிப்பதும் இனிமேல் முடியாத காரியம் என்று நினைக்கிறேன்” என்று, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்.