ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன்

” 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன்.” – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்சவின் 50 வருடகால அரசியல் பயணம் தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற அனுபவ பகிர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் 18ஆவது திருத்தச்சட்டத்தை உருவாக்குமாறு பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் கோரியிருந்தேன். எனினும், ஒருவர் இரண்டு தடவைகளே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற விடயம் மாற்றப்பட்டது.சிலர் இதனை விமர்சித்தனர். மேலும் சிலர் சரியான முடிவு என்றனர். எதுஎப்படியே 19ஆவது திருத்தச்சட்டம் ஊடாக இவை அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டது.
நான் அமைச்சராக இருந்தபோது ஜோதிடர் ஒருவர் எனக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். எந்தக்காலப்பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் ஆவேன், எந்தகாலப்பகுதியில் பிரதமராவேன், எப்போது ஜனாதிபதியாவேன் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. குறிப்பாக 2015 இல் வீட்டுக்கு செல்லவேண்டிவரும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதேபோல் 2018 இல் மீண்டெழுவேன் எனவும் அந்த கடிதத்தில் ஆரூடம் கூறப்பட்டிருந்தது.

நான் இந்தியாவுக்கு சென்றிருந்தபோதும் இதே விடயத்தை ஜோதிடர் ஒருவர் கூறினார். 2015 இல் வீடு செல்லநேரிடும் என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

2015 இல் தோல்வியடைவேன் என குடும்பத்தாருக்கும், ஏனையோருக்கும் நான் முன்கூட்டியே அறிவித்திருந்தேன். இதன்காரணமாகவே கௌரவமாக வெளியேறினேன்.
ஜோதிடம்மீது அதிக நம்பிக்கை இல்லை. ஆனால், கூறப்படும் விடயங்களை அவதானிப்பேன்.2015 இல் முன்கூட்டியே தேர்தலுக்கு செல்வதை பலரும் எதிர்த்தனர். ஆனால், செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *