இந்திய பிரபல நடிகருடன் விமானத்தில் பயணம் செய்த உறுப்பினருக்கு கொரோனா வைரஸ்!
தமிழில் மணிரத்னம் இயக்கிய ’ராவணன்’ உள்பட ஒரு சில படங்களிலும் மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ். இவர் தற்போது ’ஆடுஜீவிதம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜோர்டான் நாட்டில் நடைபெற்ற போது திடீரென கொரோனா வைரஸ் காரணமாக அங்கேயே படக்குழுவினர் இரண்டு மாதங்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது
இதனை அடுத்து சமீபத்தில் கேரள அரசின் முயற்சியால் அனுப்பப்பட்ட சிறப்பு விமானம் மூலம் பிரித்விராஜ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கொச்சி திரும்பினர். கொச்சியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரித்விராஜ், அதன் பின்னர் வீட்டுக்கு வந்து ஏழு நாட்கள் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்.
இந்த நிலையில் ஜோர்டான் நாட்டில் இருந்து பிரித்விராஜ் உடன் விமானத்தில் வந்த படக்குழுவினர்களில் ஒருவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் அவருக்கு அருகில் விமானத்தில் உட்கார்ந்து இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
’ஆடுஜீவிதம்’ திரைப்படத்தில் பிரித்விராஜூடன் இந்தப் படத்தில் அமலா பால், அபர்ணா பாலமுரளி, வினீத் ஶ்ரீனிவாசன், லக்ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.