எதிர்வரும் திங்கட்கிழமை தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்
எதிர்வரும் திங்கட்கிழமை (08) தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேசிய தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொதுத்தேர்தல் தொடர்பில் இன்று காலை முதல் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, அவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
பொதுத்தேர்தலின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதார நடிவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவினால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடவுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்கெண்ணும் நிலையங்களிலும் சுகாதார அதிகாரிகளைக் கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி, சுகாதார அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னதாக அந்தந்த மாவட்ட செயலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சுகாதார உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.