நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவொரு அச்சுறுத்தல் ஏற்பட அனுமதிக்கப்போவதில்லை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவொரு அச்சுறுத்தல் ஏற்படவும் அனுமதிக்கப்போவதில்லை எனப் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்திருக்கிறார்.
நாட்டில் இடம்பெற்ற மூன்று தசாப்தகாலப் போர் முடிவடைந்து இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது.
இந்நிலையில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள ‘யுத்த வெற்றி நாள்’ செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அர்ப்பணிப்புக்கள் மூலம் அடையப்பட்ட சமாதானத்தை எமது எதிர்கால சந்ததியினர் முழுமையாக அனுபவிக்ககூடியவாறு பேணுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
2009 மேமாதம் 19 ஆம் திகதி போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் முப்படையினர், பொலிஸார், பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட அனைவரும் நாட்டில் தீவிரவாதம் தலைதூக்காத வகையில் செயற்பட்டனர்.
அவ்வாறிருந்தும் கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் மிகவும் துரதிஷ்டவசமான சம்பவமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்இ நாட்டுற்கு வெற்றியைப் பெற்றுக்கொடுப்பதற்காக 29,000 இற்கும் மேற்பட்ட படையினர் உயிரிழந்ததுடன், 60,000 இற்கும் அதிகமான வீரர்கள் காயமடைந்து, 14,000 இற்கும் மேற்பட்ட வீரர்கள் தமது அங்கங்களை இழந்தனர்.
நாட்டின் எதிர்காலத்திற்காக தம்மை அர்ப்பணித்த வீரர்களுக்கு மக்கள் மரியாதை செலுத்த வேண்டும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவொரு அச்சுறுத்தல் ஏற்படவும் அனுமதிக்கப்போவதில்லை என்பதுடன், தற்போதைய இளைய சமுதாயம் நன்கு கற்றறிந்து, நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.