ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு 82 மில்லியன் டொலர் நஷ்டம்!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு கடந்த பெப்ரவரி மாதம் முதல் எதிர்வரும் ஜுன்மாதம்வரையான காலப்பகுதிக்கு 82 மில்லியன் அமெரிக்க டொலர் ( 1,541 கோடி ரூபா) நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் 20 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் முதல் ஜீன்வரையான காலப்பகுதியில் 62 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டம் ஏற்படும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா விமானசேவை 20 நாடுகளுக்கான விமானபோக்குவரத்துசேவையை வழங்கிவருகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல நாடுகள் விமானபோக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதலால் குறித்த நிறுவனத்துக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்வரை நஷ்டம் ஏற்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.