சவுதியில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நாடெங்கும் 24 மணி நேர ஊரடங்கு
நோன்புப் பெருநாள் விடுமுறையில் மக்கள் ஒன்றுகூடுவதை தடை செய்யும் வகையில் சவுதி அரேபியா 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதற்கமைய எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நாடெங்கும் 24 மணி நேர ஊரடங்கு அமுலில் இருக்கும் என அந்நாட்டு உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது.இருப்பினும் மக்கா நகர் தவிர்ந்த ஏனைய இடங்களில் ரமழான் மாதத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வெளியில் நடமாட அனுமதிக்கப்படுவர்.எனினும் ஓரிடத்தில் ஐவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றுகூட விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மக்கா நகரில் 24 மணி நேர ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும்.நோன்புப் பெருநாள் விடுமுறை நாட்களில் மக்கள் ஒன்றுகூடலாம் எனும் அச்சம் நிலவுவதாலேயே சமூக இடைவெளியைப் பேணும் பொருட்டு இவ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.