இந்திய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் பத்து பேர் பலி ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு
விசாகப்பட்டினத்தில் உள்ள பாலிமர் இரசாயன தொழிற்சாலையில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டதால் அந்த ஆலை அருகில் உள்ள மூன்று கிராமத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இந்த கிராமங்களில் இருப்பவர்கள் சாலையில் நடந்து சென்ற போது விஷவாயு தாக்கியதால் திடீர் திடீரென சாலையில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து மயங்கி விழுந்து அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. இந்த விஷவாயு கசியும் விபத்து காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 10 பேரும் பலியாகி உள்ளதாகவும் தெரிகிறது. மேலும் ஏராளமானவர்களுக்கு கண்ணெரிச்சல் இருப்பதால் உடனடியாக மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாலை 3 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலும் சாலையில் நடமாட்டம் இல்லை என்றும் இருப்பினும் ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷவாயு கசிவு குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக் குழுவினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு பணியை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஊரடங்கு நேரம் என்பதால் இந்த ஆலை மூடப்பட்டு இருப்பதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.