இலங்கையில் மே 11ஆம் திகதி முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமை நிலைக்கு திரும்புகிறது?

மே 11ஆம் திகதி, திங்கள், அன்று இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பான மேலதிக தெளிவூட்டல்:
01) எந்தெந்த மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது?

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும்.

ஏனைய மாவட்டங்களில் இன்று, மே 05, செவ்வாய், மற்றும் நாளை, மே 06, புதன், ஆகிய நாட்களில் – இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

இந்த மாவட்டங்களில் மே 06, புதன், இரவு 8.00 மணிக்கு  நடைமுறைக்கு வரும் ஊரடங்குச் சட்டம் மே 11, திங்கள், அதிகாலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

02) ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் இயல்பு வாழ்க்கையையும் நிறுவன செயற்பாடுகளையும் வழமை நிலைக்கு கொண்டுவருதல் எப்போது ஆரம்பமாகும்?
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருதல் மே 11, திங்கள், முதல் ஆரம்பமாகும்.

03) இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவரும் ஆரம்ப பணிகள் எவ்வாறு இடம்பெறும்?

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அரச, தனியார் துறை நிறுவனங்கள் மே 11, திங்கள், முதல் திறந்திருக்க வேண்டும்.

இதற்காக தற்போது முதல் திட்டமிடுமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களைத் திறந்து பணிகளை மேற்கொள்ளும் போது கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றுவதை நிறுவனங்களின் தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

தனியார் துறை நிறுவனங்களைக் காலை 10.00 மணிக்குத் திறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிக்கு அழைக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மற்றும் தொடரூந்துகள் என்பன, அரச மற்றும் தனியார் துறையில் தொழிலுக்காகச் செல்வோருக்காக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

04) ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு எத்தகைய விடயங்களுக்காக அனுமதி வழங்கப்படும்?

கட்டாயமாகச் சேவைகளுக்குச் சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய்ப் பரவல் தடுப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
வீடுகளில் இருந்து வெளிச்செல்வது உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மட்டுமேயாக இருக்கட்டும்.

05) தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களுக்கு ஏற்ப வீடுகளை விட்டும் வெளிச்செல்வதற்கு வழங்கப்படும் அனுமதி எந்த பிரதேசங்களுக்கு, எப்போது முதல் ஏற்புடையது?

— ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டும்;

— மே 11, திங்கள், முதல்;

— ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேலையில் அது ஏற்புடையதாகாது;

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படினும் மேற்படி அறிவுறைகளைப் பின்பற்றி மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள போதும் – பொருளாதார மற்றும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வரும் பணிகள் இடம்பெறுவதுடன், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மக்கள் தேவையற்று ஒன்றுகூடுவதைக் கட்டுப்படுத்துவதே இந்த ஏற்பாடுகளின் முக்கிய நோக்கமாகும்.
மேற்படி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக ஏலவே வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *