பிரதமர் மஹிந்தவின் அழைப்புக்கு சஜித் கூட்டணி நிராகரிப்பு
திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடைபெறும் கூட்டத்துக்கு சமூகமளிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை நிராகரிப்பதென சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சஜித் பிரேதமாச தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இது குறித்து விரிவான முறையில் ஆராயப்பட்டதையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக எதிர்கட்சிப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை அரசாங்கம் உடனடியாகக் கூட்ட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்த மகஜருக்கு ஜனாதிபதியிடமிருந்து இன்று பதில் கிடைத்திருப்பதாகத் தெரிகின்றது.
பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி இதில் திட்டவட்டமாக நிராகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அலரி மாளிகையில் திங்கட்கிழமை நடைபெறும் கூட்டத்துக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அவசர கூட்டம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது. இரவு வரையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண, ரஞ்சித் மத்தும பண்டார, குமார வெல்கம, கபீர் ஹாஸிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதியின் பதில், அலரி மாளிகைக் கூட்டத்துக்கான பிரதமரின் அழைப்பு என்பன தொடர்பாக இதில் விரிவாக ஆராயப்பட்டது. இறுதியில் பிரதமரால் கூட்டப்படும் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை எனவும், இதற்கான காரணங்களை விளக்கி விரிவான அறிக்கை ஒன்றை நாளை வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.