கொரோனாவால் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்த வைத்தியர் தற்கொலை
அறுபதாயிரம் மரணத்தை எட்டியுள்ள அமெரிக்காவின்,
நியூயார்க் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய டாக்டர் பிரீன் என்ற பெண் மருத்துவர், தன் கண்ணெதிரே கொரோனா பாதிப்பால் காப்பாற்ற முடியாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கொரோனா பலி எண்ணிக்கை 60000 எட்டியுள்ள நிலையில் நியூயார்க்கில் மட்டும் 17,500 பேர் பலியாகியுள்ளனர்.
டாக்டர் பிரீன் கொரோனாவினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் மருத்துவப் பணிக்கே திரும்பியவர்.
தானும் பிற மருத்துவர்களும் எப்படிப் போராடியும் நோயாளிகளைக் காப்பாற்ற முடியாமல் கண்ணெதிரே அவர்கள் உயிர்ப்பிரிவதை தன்னால் தாங்க முடியவில்லை என்று அவர் பல முறை கூறியதாக அவரது தந்தை வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
நியூயார்க்கில் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கடும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 300 மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் பிரீனை ‘ஹீரோ’ஆகக் கொண்டாடுமாறு அவரது தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி-AMN