பழைய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (24)  ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மூன்று நிக்காயக்களையும் சேர்ந்த மகா சங்கத்தினருக்கு விளக்கமளித்தார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தல், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், மக்களுக்கு வழங்கிய நிவாரணங்கள் மற்றும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்தும் ஜனாதிபதி மஹா நாயக்கர்களுக்கு விளக்கினார்.

நாடு முகம்கொடுத்துள்ள சவால்களுக்கு மத்தியில் சுகாதார, பாதுகாப்பு துறைகளும் முழு அரச இயந்திரம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கதாக இருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தனக்கு பெரும் மக்கள் ஆணையொன்றை வழங்கி மக்கள் தன் மீது வைத்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பலமானதொரு பாராளுமன்றத்தின் தேவையை விளக்கிய  ஜனாதிபதி, புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதை விடுத்து பழைய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் வெள்ளிக்கிழமை மகாசங்கத்தினரை சந்திப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி,அதற்கு மூன்று நிக்காயக்களினதும் மகாசங்கத்தினருக்கு அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி பதவியை ஏற்ற போது ருவன்வெலிசேயவிலும் ஜனாதிபதி கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட வேலையிலும் தான் குறிப்பிட்டதைப் போன்று மகாசங்கத்தினரின் ஆசிர்வாதம் மற்றும் வழிகாட்டல்களை மனமுவந்து எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைத்து மகாசங்கத்தினரினதும் முழுமையான ஆசிர்வாதம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு உள்ளது என்று இதன்போது கருத்துத் தெரிவித்த மகாசங்கத்தினர் தெரிவித்தனர்.

பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டை குழப்பமான நிலைக்கு உள்ளாக்க வேண்டியதில்லை என்றும் பழைய பாராளுமன்றத்தை கூட்டக்கூடாது என்பது மகாசங்கத்தினரின் ஏகமனதான தீர்மானம் என்றும் மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர். முன்னர் இருந்த பாராளுமன்றம் நாட்டின் தற்போதைய நிதிப் பிரச்சினைக்கு வகைகூறவேண்டும் என்று மல்வத்தை பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் குறிப்பிட்டார்.
வைரஸ் ஒழிப்புக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் ஜனாதிபதி முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நோக்கும் போது புதியதொரு சிந்தனையொன்று நாட்டில் நடைமுறையாவது தெளிவாகிறது. அது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கு ‘சுபீட்சத்தின் சிந்தனை’ என இணைக்கப்பட வேண்டிய உப பிரிவாகும் என அமரபுர ஸ்ரீ தர்மரக்சித நிகாயவின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய திருக்குணாமலயே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.
கொரேனா வைரஸ் ஒழிப்பில் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களில் உலகின் ஏனைய நாடுகளுக்கும் பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்று பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டார். நாட்டின் இளைய தலைமுறை மற்றும் பல்வேறு குழுக்கள் பல புத்தாக்கங்களை செய்துள்ளனர். அவை எதிர்காலத்திற்கு வழிகாட்டும் பொன்னான சந்தர்ப்பம் என்றும் ஜனாதிபதியின் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மஹா சங்கத்தினர் தொடர்ந்தும் பலமாக இருப்பார்கள் என்றும் தேரர் குறிப்பிட்டார்.


COMMENTS
Your name

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *