கொரோனா பாதிப்பால் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 26 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கும்
கொரோனா பாதிப்பால் உணவு பாதுகாப்பின்மையால் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 26 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கும் என்று ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், உணவு பிரச்சினை ஆகியவை குறித்து ஐ.நா. உலக உணவு திட்டம்,நேற்று ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா பரவலுக்கு முன்பே, 2019-ம் ஆண்டு, உணவு பாதுகாப்பின்மையால் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 13 கோடியே 50 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை, கொரோனா பாதிப்பால், நடப்பாண்டில் இரட்டிப்பாக உயரும்.
அதாவது, 26 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறோம். 50 நாடுகளில், உணவு பிரச்சினையில் சிக்கி தவிப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட தலா 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு மோதல்கள், பொருளாதார அதிர்வு, வறட்சி போன்ற வானிலை அம்சங்கள் காரணங்களாக இருக்கலாம்.
பொருளாதார பாதிப்பு அதிகரித்தால், இன்னும் 18 கோடி பேர், பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள். இத்தகைய நிலைமையை தவிர்க்க எல்லோரும் கூட்டாக பாடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.