ஊரடங்கு சட்டத்தை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது
ஊரடங்கு சட்டத்தை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் சுகாதார துறையினர் ஆராய்ந்துவருகின்றனர். அவர்களின் பரிந்தரை கிடைத்ததும் ஜனாதிபதி உரிய தீர்மானத்தை எடுப்பார் – என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
ஊரடங்கு சட்டம் அடுத்தவாரம் முதல் கட்டங்கட்டமாக நீக்கப்படவுள்ளது என வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொரோனா விவகாரத்தில் விசேட வைத்தியர்கள் உட்பட சுகாதாரத் துறையினரிடமிருந்து ஆலோசனைகளைப்பெற்று, அவற்றை அடிப்படையாகக்கொண்டே ஜனாதிபதி தீர்மானங்களை எடுக்கின்றார். ஊரடங்கு உத்தரவின்போது பல தரப்புகளினதும் கருத்துகள் உள்வாங்கப்படுகின்றன. இதன்காரணமாகவே இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தகூடியதாக இருக்கின்றது.
இவ்விவகாரம் தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி நேற்றும் ( ஏப்ரல் 15) பரந்தப்பட்ட கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.
ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது, நீக்குவது தொடர்பில் சுகாதார அமைச்சின் நிலைப்பாட்டை – கருத்தை விஞ்ஞானபூர்வமாக அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.
அதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
சுகாதார துறையின் பரிந்தரை முன்வைக்கப்பட்டதும் அது உட்பட அனைத்து காரணிகளையும் கருத்திற்கொண்டு ஜனாதிபதி முடிவை அறிவிப்பார்.” – என்றார் சுகாதார அமைச்சர்.