இலங்கையில் கொரோனா வைரஸ் அபாய கட்டத்தை தாண்டிக்கொண்டிருக்கிறது

கொரோனா வைரஸ்  தாக்கம் இலங்கையில் அபாய கட்டத்தை தாண்டிக்கொண்டிருக்கிறது.  எனவே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடரவேண்டும். இல்லையேல் எந்நேரத்திலும் நிலைமை மாறக்கூடும்.”  – என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

சமூகம் மத்தியில்  ‘கொரோனா’ வைரஸ் பரவக்கூடிய அபாயம் நாட்டில் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.கடந்த ஐந்து நாட்களில் சமூகத்திலிருந்து புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படவில்லை. தனிமைப்படுத்தல் முகாம்களில் மருத்துவ கண்காணிப்பின்கீழ் இருந்தவர்கள் மற்றும் முடக்கப்பட்ட பகுதியில் கோரானா நோயாளிகளுடன் தொடர்பை பேணியவர்களுக்கே வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது  கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதா என்பது குறித்து மிகவும் துல்லியமாக கருத்து வெளியிடமுடியாது. எனினும், நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் எச்சரிக்கை – அபாய கட்டத்தை தாண்டிக்கொண்டிருக்கின்றோம். முன்னர் இருந்ததைவிடவும் அபாயநிலை குறைவடைந்துள்ளது.

ஆனாலும்  வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளாவிட்டால், நிலைமை எந்நேரத்திலும் மாறக்கூடும். எனவே, சமூக இடைவெளி உள்ளிட்ட விடயங்கள் தொடர்ந்தும் பின்பற்றப்படவேண்டும்.

ஊரடங்குவேளையில் நிலைமையை கட்டுப்படுத்துவது இலகுவாக இருக்கும். ஆகவே, ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் இதேபோன்று இறுக்கமான நடைமுறையை பின்பற்றுவதற்கான வேலைத்திட்டம் அவசியம். அப்போதுதான் சாதகமான பெறுபேறு கிட்டும்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *