கொரோனாவால் உயிர் பிரியும் முன் தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்த மகன்
அமெரிக்காவில் ஒரு பெண் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிர் பிரியும் முன் அவரது ஆறு பிள்ளைகளில் மூத்த மகன் தம்பி தங்கைகளை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடந்தேறியது.
வாஷிங்டனைச் சேர்ந்த Sundee Rutter (42), கணவன் இல்லாமல் தனியே ஆறு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர்.
அத்துடன், ஏற்கனவே மார்பக புற்றுநோயை வென்று மீண்டவர் Sundee. இந்நிலையில் Sundeeக்கு உடல் நலக் குறைவு ஏற்பட, அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது
நாளுக்கு நாள் Sundeeயின் உடல் நிலை மோசமாகிக்கொண்டே வர, ஒரு நாள் பிள்ளைகளை அழைத்த மருத்துவர்கள் தாயை வந்து கடைசியாக ஒரு முறை சந்திக்கும்படி கூறியுள்ளனர்
பிள்ளைகள் வர, Sundee ஒரு கண்ணாடி அறைக்குள் இருக்க, வெளியே இருந்து பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகள் வாக்கி டாக்கி மூலம் தாயிடம் விடை பெற்றுக்கொண்டனர்.
அப்போது Sundeeயின் மூத்த மகனான Ross-Rutter (20), தான் அம்மாவை மிகவும் நேசிப்பதாகவும், தம்பி தங்கைகள் குறித்து கவலைப்படவேண்டாம் என்றும், தான் அவர்களைப் பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்
தாயின் உயிர் பிரியும்போது, அவர் பக்கத்தில் இல்லாததுதான் பெரிய வருத்தம் என்கிறார் Ross-Rutter.