இத்தாலியில் கொரோனா வைரஸினால் இறந்தவர்கள் சவப்பெட்டி கள் இல்லாமல் தேங்கி கிடப்பு!
இத்தாலியில் கொரோனா வைரஸினால் இறந்தவர்களை சவப்பெட்டிகள் இல்லாமல் சடலங்கள் தேங்கி கிடப்பதாகவும், சடலங்களை எரிக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் மோசமான சூழ்நிலை நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் தான் அதிக உயிரிழப்பு என்கிறார்கள். உண்மையில் சீனாவை விட இத்தாலிதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், சீனாவின் ஊஹானை சேர்ந்தவர்கள் இத்தாலியில் நிறைய பேர் வேலை பார்த்து வருவதால், அவர்கள் மூலமாக இந்த வைரஸ் ஊடுருவி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அதுமட்டுமின்றி படு கவனக்குறைவாக இருந்ததால் தான் இவ்வாறான உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது இத்தாலியில் 47 ஆயிரம் பேரை தாக்கியுள்ள கொரோனா வைரஸ், 4000 பேரின் உயிரைக் காவு வாங்கியுள்ளது.
உயிரிழப்புகள்தான் இப்படி என்றால் சடலங்களை அடக்கம் செய்வது அதைவிட பெரிய பிரச்சனையாக உள்ளது.. இத்தாலியின் உள்ள பெர்காமோ என்ற நகரம் தான் அந்நாட்டிலேயே மிக அதிகமாக பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.. அங்கிருக்கும் சுடுகாடுளே திணறும் அளவுக்கு தினமும் ஏராளமான உடல்கள் வந்து குவிகின்றன.
சராசரியாக ஒருநாளைக்கு குறைந்தது 93 பேர் அந்த நகரத்தில் மட்டும் இறப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தன்னை பாதித்துள்ளது என தெரியாமலேயே எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். அதை கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்த உயிரிழப்பு என்பது உண்மையான எண்ணிக்கையைவிட அதிகம் இருக்கும் என்று பெர்காமோ நகர மேயர் கோரி தெரிவித்துள்ளார்.
அந்நகரில் உள்ள சுடுகாடு 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும், ஒரு நாளைக்கு 25 சடலங்களை மட்டுமே எரிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகள் அப்படி அப்படியே தேங்கி கிடக்கின்றன. இதன்காரணமாக சடலங்களை பக்கத்து நகரங்களில் உள்ள சுடுகாட்டில் எரிக்க, அந்த சவப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
சுடுகாட்டில் இவ்வாறான பிரச்சினை ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டும் வருகின்றார்களாம். இந்நிலையில் இத்தாலிக்கு உதவி செய்ய சீனா களத்தில் இறங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.