கொரோனா வைரஸை வலிந்து பெறத் துடிக்கும் இலங்கை மக்கள்
கொரோனாவை வலிந்து பெறத் துடிக்கும் மக்கள்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவே மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் சனநடமாட்டம் மற்றும் ஒன்று கூடல்களை தவிர்க்குமாறும் அரசு வலியுறுத்துகிறது.
ஆனால் நாம் இதனை பெரிதாக பொருட்படுத்தாமல் கடற்கரை வெளிகளிலும்,வேறு இடங்களிலும் கூட்டம் கூட்டமாக இருக்கிறோம்.அது மாத்திரமல்லாமல் பொருட்களை கொள்வனவு செய்ய பெரும் திரளாக கடைகளிலும் ஒன்று கூடுகிறோம்.
இத்தாலியில், கொரோனா ஆரம்பித்தபோது இவ்வாறுதான் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுமுறையும் கொடுத்தார்கள். ஆனால் அந்த விடுமுறையை மக்கள் தவறாக பயன்படுத்தினார்கள். தமது வீட்டில் மரணம் ஏற்படும் வரை யாருமே அதைப்பற்றி கவலைப்படவில்லை.
கிடைத்த விடுமுறையை பயன்படுத்தி பார்க், பீச், ஷொப்பிங்மால் என அத்தனை மையங்களிலும் கூடினார்கள். பொருட்களுக்கு தட்டுப்பாடு வரப்போகுதென்று வியாபாரம் நிலையங்களில் முட்டிமோதினார்கள். விளைவாக, அசுரவேகத்தில் கொரோனா பரவத்தொடங்கி மக்களை கொத்துக்கொத்தாக பலியெடுத்தது.
இன்று கொரோனாவின் மிகப்பெரிய மனிதப்பேரவலம் நடக்கின்ற உலக நாடுகளில் இத்தாலி முன்னிலை வகிக்கிறது. என்ன செய்வதென்றே தெரியாமல் அந்நாட்டு அரசாங்கம் தடுமாறுகிறது.
அடுத்தவருக்கு நேர்ந்த கதியை உதாரணமாகக்கொண்டு வாழ்வியலைக் கடைப்பிடிப்பதுதான் அறிவார்ந்த செயலாகும். இங்கு இன்னமும் பொது இடங்களில் முட்டிமோதிக்கொண்டுதான் இருக்கிறோம்.நாம் அரசாங்கத்தின் கட்டளைகளை ஏற்று நடாக்கவிட்டால் ஏற்பட போகும் விபரீதத்தை எவராலும் தடுக்க முடியாது.