நாளை முதல் இந்தியாவுக்கான சுற்றுலா விசா இடைநிறுத்தம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளை 13-ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 வரை அனைத்து சுற்றுலா விசாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு பெப்ரவரி 15-ஆம் திகதிக்கு பின்னா் பயணம் செய்தவா்கள் மற்றும் அங்கிருந்து இந்தியா வந்தவா்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கண்காணிக்கவும் இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா குறித்த அச்சம் தீவிரமடைந்துள்ளது. இதுவரை உரிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் அந்தந்த நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் ஏற்கனவே சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகளுக்கு விசா வழங்குவதை இந்திய மத்திய அரசு இரத்து செய்திருந்தது.

மேலும் குறிப்பிட்ட சில நாடுகளைச் சோ்ந்தவா்களுக்கு ஏற்கவே விசா வழங்கப்பட்டு அவா்கள் இந்தியாவுக்குள் நுழையாமல் இருந்தால் அந்த விசாக்களும் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *