யானை இரண்டாக உடைந்தது கடைசி முயற்சியும் தோல்வி
ஆழமாகப் பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை ஒருங்கிணைப்பதற்கான, கடைசி முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. இதனால் இரு அணிகளும் தனி வழிப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளன.
ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் விசுவாசிகள் நேற்று இரவு சந்தித்துப் பேச்சு நடத்திய போதிலும், இணக்கப்பாட்டுக்கு வரத் தவறிவிட்டனர்.
ராஜித சேனாரத்ன தலைமையில் கருஜயசூரியவின் தலைமையிலேயே குறித்த சந்திப்பு நடைபெற்றது.
யானை சின்னத்தில் 22 மாவட்டங்களில் போட்டியிடுவோம் என்ற பிடிவாதத்தைக் ரணில் தரப்பு கைவிட மறுத்து விட்டது.
இந்தச் சந்திப்பில் இருதரப்பு பிரதிநிதிகளும் சட்ட நிபுணர்களுடன் பங்கேற்றிருந்தனர்.
ரணில் தரப்புக்கு சஜித் பிரேமதாச சமாதான சமிக்ஞையைக் காண்பித்த போதிலும், ஐதேக தூதுக்குழு பிடிவாதமாக இருந்தது.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு இன்னமும் முழுமையாக வடிவமைக்கப்படாத நிலையில், ஐதேகவுடனான உடன்பாட்டுக்கு முன்னதாக அந்த யாப்பில் திருத்தம் செய்யப்படாவிடின், அதன் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பேச்சு தோல்வி என்பதை இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இரு தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.