நீர்கொழும்பு மோதலில் ஒருவர் பலி! 7 பேர் கைது
நீர்கொழும்பு – பெரியமுல்லை பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரியமுல்லை பகுதியை சேர்ந்த 18 வயதான ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஏனைய 6 சந்தேகநபர்களும் சட்டத்தரணியூடாக பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியதன் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் நாளை (11) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரியமுல்லை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு நேற்று சென்ற சிலர், ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் ஊழியருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
ஹோட்டலுக்கு சென்றவர்கள் மதுபானம் அருந்த முற்படுகையில், உரிமையாளரும் ஊழியரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, கூரான ஆயுதத்தால் ஹோட்டல் உரிமையாளரும் ஊழியரும் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்