அரசாங்கத்தை மண்டியிட செய்வோம்
எதிர்க்கட்சிகளெல்லாம் ஓரணியில் திரண்டு பொதுத்தேர்தலை எதிர்கொண்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை மண்டியிட்டு – மண்கவ்வ வைக்கமுடியும் – என்று புதிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் குமார வெல்கம சூளுரைத்துள்ளார்.
புதிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று புறக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றுகையிலேயே குமார வெல்கம இவ்வாறு சூளுரைத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் ஆசியுடனேயே நாம் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளோம். எனவே, தற்போது வீழச்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை என்றாவது ஒருநாள் மீட்டெடுப்போம்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவால் உருவாக்கப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க பாதுகாத்தார். அதன்பின்னர் சந்திரிக்கா அம்மையார் வழிநடத்தினார். மஹிந்த ராஜபக்ச தலைவராக இருக்கும்போதும் கட்சி சிறப்பாக செயற்பட்டது.
2015 ஆம் ஆண்டிலேயே எமது கட்சி காட்டிக்கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நானும் வெளியேறினேன். இன்று சுதந்திரக்கட்சி எந்த நிலையில் உள்ளது? கட்சியின் தலைவரையே மாற்று கட்சியிலுள்ளகீழ் நிலை உறுப்பினர்கள் விமர்சிக்கின்றனர்.
அதேவேளை, பலமானதொரு எதிரணியை உருவாக்குவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் அரசாங்கத்தை மண்டியிடவைக்கமுடியும். நாடாளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கைவந்தபோது எதிர்க்கட்சிகளின் பலத்தை காட்டினோம். பொதுத்தேர்தலிலும் ஒன்றாக செயற்பட்டால் அரசாங்கத்தை ஆட்டக்காண வைக்கமுடியும்.