இந்தியாவை ஆக்கிரமித்த கொரோனா வைரஸ் அச்சத்தில் மக்கள்

இதுவரை இந்தியளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 4ம் திகதி நிலவரத்தின் படி 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஈரானுக்கு சென்று திரும்பிய காஜியாபாத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அனைத்து மாநில அரசுகளும் மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்று இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்குள் உள்நுழையும் வெளிநாட்டினருக்கு கடும் கட்டுப்பாடு!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் உள்நுழையும் வெளிநாட்டினருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளது. அதனடிப்படையில் இந்தியா செல்லும் வெளிநாட்டினர் தமக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான மருத்துவப் பரிசோதனை சான்றிதழை தங்கள் நாட்டு சுகாதாரத்துறையிடம் இருந்து பெற்று சமர்பிக்க வேண்டும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய எல்லைப்பகுதி நுழைவாயில்களில் தீவிர கண்காணிப்பு!

அண்டை நாடுகளில் இருந்து இந்திய எல்லைப்பகுதி ஊடாக உள்நுழைவோரை கண்காணிக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஏற்பாடுகளை இந்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா ஆய்வு செய்ததுடன், எல்லைச் சாவடிகளில் 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *