இலங்கை உள்நாட்டு யுத்தக் காலத்தில் காணாமல் போனவர்களை மறந்து முன்னோக்கி செல்வதே சிறந்தது

இலங்கை உள்நாட்டு யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் மறந்து, முன்னோக்கி செல்வதே சிறந்தது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, இராணுவத்தைச் சேர்ந்த பெருந்திரளானோரும் காணாமல் போயுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இதன்படி, காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனையொன்று நாட்டில் உள்ளதாகவும், அந்த பிரச்சனையை அனைத்து தரப்பினரும் மறந்து முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தாக்குதல்களுக்கு இலக்காகி, உயிரிழந்தவர்களே காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போயுள்ளதாகவே காணாமல் போனோரின் உறவினர்கள் கூறி வருவதாக தெரிவித்திருந்தனர்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை என குறிப்பிட்டார்.

யுத்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டவர்களே காணாமல் போயுள்ளமை யுனிசெஃப் நிறுவத்தினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் யுத்தக் காலத்தில் காணாமல் போயுள்ளதையும் அவர் இதன்போது கூறினார்.

யுத்தத்தில் உயிரிழந்து, சடலங்கள் கிடைக்காதவர்களே இந்த காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யுத்த களம் தொடர்பிலான புரிந்துணர்வு இல்லாதவர்களே, இவ்வாறான பிரச்சனைகளை எழுப்பி வருவதாக அவர் கூறினார்.

காணாமல் போயுள்ளதாக கூறிக் கொள்ளும் சிலர் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், காணாமல் போனோர் விவகாரத்தை மறந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என கூறிய ஜனாதிபதி, காணாமல் போனமை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பிரகீத் எக்னெலிகொட உயிரிழந்திருக்கும் பட்சத்தில் அவருக்கும் மரண சான்றிதழை வழங்க முடியும் என குறிப்பிட்டார்.

இலங்கையை காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் தாம் ஒருபோதும் ஈடுபட போவதில்லை என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதன் ஊடாகவே அவர்களின் பிரச்சனைகளுக்காக தீர்வை எட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் முதலில் பொருளாதாரத்தை இலக்காகவே கொண்டே போராட்டங்களை ஆரம்பித்திருந்ததாக கூறிய ஜனாதிபதி, பின்னர் அந்த போராட்டங்கள் அரசியல்மயப் படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களுக்கும், அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில், பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார்.

கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமே, நாட்டின் அரசியல் பிரச்சனைகளுக்கான பிரதான காரணம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

19ஆவது திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டமையினால், நிறைவேற்று அதிகாரத்திற்கும் சட்டவாக்கத்திற்கும இடையில் பிரச்சனை ஏற்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியொருவருக்கு, 19ஆவது திருத்தச் சட்டம் இருக்கின்றமையினால் கடமையாற்ற கடினமாக உள்ளதென அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் காரணமாகவே நாட்டில் மீண்டும் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி இதன்போது கூறினார்.

மேலும் மத பயங்கரவாதமொன்று நாட்டில் மீண்டும் தலைத்தூக்காதிருக்கும் வகையில் தான் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரச புலனாய்வுத்துறை, இரகசிய பொலிஸார், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறைகளை ஒன்றிணைந்து, அதற்கான வேலைத்திட்டமொன்று தயாரித்து வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

மத பயங்கரவாதம் மற்றும் ஏனைய பயங்கரவாதங்களை இல்லாதொழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் சிறந்ததாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது இடைகால அறிக்கையிலும் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் அரசியல் கைதிகள் என்ற ஒரு தரப்பு இருக்கின்றமை தொடர்பில் தான் நம்பவில்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

கடந்த அரசாங்கம் பல இராணுவ அதிகாரிகளை உயர் நிலை கடமைகளில் ஈடுபடுத்தியிருந்த போதிலும், அது தொடர்பில் எவரும் குரல் எழுப்பாத பின்னணியில் தன்னை மாத்திரம் விமர்சித்து வருவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நாட்டில் இராணுவத்தினர் சிவில் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இராணுவ அதிகாரிகள் பல்வேறு பயிற்சிகளை பெற்று, சிறந்த தலைமைத்துவத்தை பெற்றிருக்கின்றமையினால், அவர்கள் சிறந்த நிர்வாகிகளாக இருப்பார்கள் என்றார்.

இதனாலேயே தான் இராணுவ அதிகாரிகளை கடமைகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *