ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக கரு ஜயசூரிய?
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை நேற்று திங்கட்கிழமை இரவு அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் செயற்பாடுகளைப் பொறுப்பேற்குமாறும், பிரதமர் வேட்பாளராக களமிறங்கும்படியும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அக்கிலவிராஜ் காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, பாலித்த ரங்கே பண்டார, ரவி கருணாநாயக்க ஆகியோரே சபாநாயகரை சந்தித்தனர்.
இவர்கள் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சார்பாக செயற்படுபவர்கள் என்பதோடு ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்புக் கூட்டத்தை நேற்று பகிஸ்கரித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து கவனத்திற்கொள்வதாக முன்னாள் சபாநாயகர் பதிலளித்திருக்கின்றார்