மனைவி கொலை! கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!! கள்ளக் காதலி தூக்கில் தொங்கி தற்கொலை!!!
கடூரில், மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்த டாக்டரான கணவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த கள்ளக் காதலியும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சோகம் நடந்து உள்ளது.
கர்நாடகத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் லட்சுமேஸ்வரா பகுதியில் வசித்து வந்தவர் ரேவந்த். பல் டாக்டரான இவர் பீரூரில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது மனைவி கவிதா (31). இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் கவிதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் வீட்டில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதனால் கவிதாவை மர்மநபர்கள் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என்று கடூர் டவுன் போலீசார் கருதினார்கள். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து கடூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் கவிதாவின் பெற்றோர், எங்கள் மகள் சாவில் சந்தேகம் உள்ளது என்றும், அவரை கணவர் ரேவந்த் கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசில் புகார் அளித்து இருந்தனர். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் கவிதாவின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில் கத்தியால் கழுத்தை அறுக்கப்படுவதற்கு முன்பு, கவிதாவின் வயிற்றில் 2 மயக்க ஊசி போடப்பட்டு இருந்ததாக கூறப்பட்டு இருந்தது. ரேவந்த் டாக்டர் என்பதால், அவர் தான் கவிதாவுக்கு மயக்க ஊசி போட்டு அதன்பின்னர் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது ரேவந்த்தும், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்த பேஷன் டிசைனரான ஹர்சிதா (32) என்பவரும் காதலித்து வந்து உள்ளனர். ஆனால் ரேவந்த், கவிதாவையும், ஹர்சிதா பெங்களூருவில் பி.எம்.டி.சி பஸ் டிரைவராக இருக்கும் சுதீந்திராவையும் திருமணம் செய்து கொண்டனர். ஹர்சிதாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஹர்சிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது சுதீந்திரா தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் ரேவந்தும், ஹர்சிதாவும் பேசி பழகி வந்தனர். இது அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. ஹர்சிதாவை சந்திக்க ரேவந்த் அடிக்கடி பெங்களூருவுக்கு சென்று வந்து உள்ளார். இதுபற்றி அறிந்த கவிதா, ரேவந்த்தை கண்டித்து உள்ளார். ஆனாலும் ஹர்சிதாவுடனான கள்ளக்காதலை ரேவந்த் கைவிடவில்லை. இதனால் ரேவந்த், கவிதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கவிதாவை ரேவந்த் ஒரு நகைக்கடைக்கு அழைத்து சென்று அவருக்கு நகை வாங்கி கொடுத்து உள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டிற்கு வந்து உள்ளனர். அப்போது ஹர்சிதாவுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடும்படி ரேவந்திடம், கவிதா கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.