இந்தியாவில் இரண்டு தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது இந்தியாவில் தற்போது கையிருப்பு உள்ள மொத்த தங்கத்தை விட 5 மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.
இந்திய புவியியல் ஆய்வு மையம் தங்கச் சுரங்கம் தொடர்பாக பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறது.
இந்தியா முழுவதும் பல சோதனைகளை செய்துள்ள ஆய்வு மையத்தின் முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.
அதன்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ராவில் இரண்டு பெரிய தங்கச் சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
அதன்படி இந்தச் சுரங்கங்களில் 3,350 டன் அளவுள்ள தங்க படிமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோன்பாஹ்தி என்ற இடத்தில் 2700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டி என்ற சுரங்கத்தில் 650 டன் தங்க படிமங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவின் கையிருப்பில் 626 டன் தங்கம் உள்ள நிலையில் இப்போது கிடைத்துள்ள தங்க அளவு கையிருப்பைவிட 5 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
தங்கம் மட்டுமின்றி யுரேனியம் போன்ற தாது பொருட்களும் இந்த இடத்தில் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.