பாராளுமன்ற தேர்தலில் சஜித் படுதோல்வி அடைவார்!
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி சவால் அல்ல. ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைர் ரணில் விக்கிரமசிங்க இருந்த நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளார். எனவே, சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத் தேர்தலிலும் படுதோல்வியடைவார்.”
– இவ்வாறு ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் தோன்றவுள்ள பொதுக் கூட்டணியின் சின்னம் குறித்து எதிர்த்தரப்பில் இன்று பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
ஒரு தரப்பினர் ‘யானை’ சின்னத்தையும், பிறிதொரு தரப்பினர் ‘அன்னம்’ சின்னத்தையும், மூன்றாவது தரப்பினர் ‘இதயம்’ சின்னத்தையும் உரிமை கோருகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியின் பதவிகள் தற்போது சிறந்த பேச்சுகளின் ஊடாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டணியின் ஊடாகவே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவோம்” – என்றார்