யானையா இதயமா நாளை இறுதி முடிவு
ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டிய சின்னம் தொடர்பில் ஆராய்ந்து – இறுதி முடிவை எடுப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்குமிடையில் நாளை சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் ரணில் ஆதரவு உறுப்பினர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தெரியவருகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்குமிடையில் நேற்றிரவு சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது புதிய கூட்டணிக்கு யானை சின்னத்தை விட்டுக்கொடுக்குமாறு சஜித்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ரணில் நிராகரித்தார். எனினும், மேலும் சில விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கு தயார் எனவும் கூறினார்.
இந்நிலையில் சின்னம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக இரு தரப்பில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள் நாளை கொழும்பில் கூடவுள்ளன.
இந்நிலையிலேயே சின்னம் பற்றி இறுதிமுடிவெடுப்பதற்காக சஜித் பாராளுமன்றக்குழுவை கூட்டியுள்ளார்.
யானையா, இதயமா என இதன்போது உறுதியான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமைவரை பிற்போடப்பட்டுள்ளது.