உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் சிங்கப்பூரில் இருந்து பரவியுள்ளதா?
கடந்த புதன்கிழமை சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றின் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த வங்கியில் பணியாற்றிய 300 ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதற்காக ஒட்டுமொத்த அலுவலகத்திற்கே விடுமுறை அளிக்கும் நிலையில்தான் சிங்கப்பூரில் கொரோனா குறித்த அச்சம் மேலோங்கி வருகிறது.
ஏனெனில் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சிங்கப்பூரும் ஒன்று. அங்கு 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கண்டறியப்பட்டாலும், சிங்கப்பூரில் இந்த எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.
ஒன்று சீனாவுடன் சிங்கப்பூருக்கு இருக்கும் வர்த்தக உறவுகள். கடந்த 2019-ஆம் ஆண்டு மட்டும் சுமார் மூன்றரை மில்லியன் சீன மக்கள் சிங்கப்பூருக்கு வந்திருப்பதன் மூலம் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை நாம் புரிந்து கொள்ளலாம்.
இரண்டாவதாக உலக நாடுகளை விமானப் பயணத்தின் மூலம் இணைக்க கூடிய முக்கிய மையமாக செயல்படும் ச்சங்கி விமான நிலையத்தை கூறலாம். இந்த விமான நிலையத்தில் ஒவ்வொரு 80 விநாடிகளுக்கும், ஒரு விமானம் புறப்படுகிறது ஒரு விமானம் தரையிறங்குகிறது. அந்த அளவுக்கு மிகவும் பரபரப்பான இயங்க கூடிய, வெளிநாட்டு மக்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி..
இது மட்டுமல்லாமல் தொழில்ரீதியான சந்திப்புகளுக்கும், கூட்டங்களுக்கும் சிங்கப்பூரை பலரும் தேர்ந்தெடுப்பதால், உலக நாடுகளைச் சேர்ந்த பலர் அடிக்கடி சிங்கப்பூருக்கு வருவதும் வழக்கமான ஒன்று. ஆனால் அப்படி நடைபெற்ற கூட்டம் ஒன்றுதான், சீனா தவிர்த்து வெளிநாடுகளில் கொரோனா பரவ காரணமாக இருந்துள்ளது என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாத மத்தியில், சிங்கப்பூரில் சீனா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 பேர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
சீனாவை சேர்ந்த சிலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதில் 41 வயதான மலேசிய நபர் ஒருவரும் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டம் நடைபெற்ற ஒரு வாரம் கழித்து அந்த மலேசிய நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அடுத்து அந்த நபர் மூலம் அவருடைய தாய் மற்றும் சகோதரிக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
அதே கூட்டத்தில் கலந்து கொண்ட தென்கொரியாவைச் சேர்ந்த இருவருக்கும் சில நாட்களுக்கு பிறகு கொரோனா இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மூன்று சிங்கப்பூர் வாசிகளுக்கும், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது அடுத்தடுத்து கண்டறியப்பட்ட்து. ஆனால் இந்த தொற்று, அவர்கள் தத்தம் நாடுகளுக்கு சென்ற பின்னர்தான் உறுதி செய்யப்பட்டது.