இலங்கையில் தனிச் சிங்கள அரசாங்கத்தை உருவாக்கவேண்டும்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனாவின் காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தனிச் சிங்கள பௌத்த தலைவரைத் தெரிவுசெய்ததைப் போன்று தனிச் சிங்கள அரசாங்கமும் தோற்றம் பெறவேண்டும் எனக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நேரத்தில் இருந்து இன்று வரையில், தான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என்பதை பலசெயற்பாடுகளின் ஊடாக நிரூபித்துள்ளார்.
நாட்டில் ஒரு சட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது நாட்டில் இனங்களுக்கிடையில் சட்டங்கள் வேறுப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையினை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பினையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும்.
நாடாளுமன்றத்தின் பாரம்பரிய முறைமைகளே பல நெருக்கடிகளுக்கும், அரச நிர்வாகத்திற்கும் தடையாக உள்ளன. எனவே உருவாகும் தனிச் சிங்கள அரசாங்கத்தில் அடிப்படைவாத கொள்கைகளற்ற தமிழ்-முஸ்லிம் இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசியல்வாதிகள் உள்வாங்கப்பட வேண்டும்” என கலகொட அத்தே ஞானசார தேரர் கூறினார்.