மாணவிகள் மீது மோசமான பகிடிவதை: திருமலையைச் சேர்ந்த மற்றொரு மாணவனுக்கும் தடை! – யாழ். பல்கலை நிர்வாகம் அறிவிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்பப் பீடத்தில் மோசமான பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மற்றொரு இரண்டாம் வருட மாணவனான திருகோணமலையைச் சேர்ந்த எஸ்.பகீரதனுக்கு மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை நேற்றிலிருந்து விதிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்பப் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் புதுமுக மாணவிகள் சிலர் மீது மோசமான பகிடிவதையில் ஈடுபட்டனர் என்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று குழு விசாரணைகளின் அடிப்படையில் இரண்டாவது மாணவனுக்கும் உள்நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பகிடிவதை தொடர்பில் சான்றாதாரங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் மேலும் சில மாணவர்களுக்கு உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் என்று யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதல்கட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைக்கு உள்ளாகுவார்கள் என்று யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.