தேர்தல்களை இலக்குவைத்தே மாவட்ட செயலர்கள் மாற்றம்! – சரவணபவன் எம்.பி. சபையில் சுட்டிக்காட்டு

“வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலர்களையும் அவசரமாக மாற்றுவதற்கு இந்த அரசு முன்னெடுப்புக்களை நகர்த்தியுள்ளது. இரண்டு மாவட்ட செயலர்கள் ஏற்கனவே மாற்றப்பட்டு அவர்களுக்குப் பதிலாக இருவர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிங்களவர். இவ்வாறிருக்கையில் ஏனையவர்களையும் கூண்டோடு மாற்றும் செயற்பாடானது தேர்தல்களை இலக்கு வைத்த நகர்வென்றே இதனை நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் மேலும் கூறியதாவது:-

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் இந்த மாவட்ட செயலர்களின் மாற்றமானது தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து பொம்மை அரசாங்கமொன்றை நடத்துவதற்கான அரசின் திட்டமிட்ட நடவடிக்கையாகவே கொள்ளவேண்டியுள்ளது. இதன்மூலம், தமக்கான வாக்கு வங்கியைப் பலவந்தமாக உருவாக்கலாம் என்றும், தாம் நினைத்தபடி வடக்கு மாகாணத்தை ஆட்டிவைக்கலாம் என்றும் இந்த அரசு எண்ணுகின்றது.

இந்த அடக்குமுறைகளைத் தமிழ் மக்கள் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர். நிச்சயமாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் ஓரணியில் திரளத்தான் போகின்றார்கள்.

‘ஒற்றுமைக்குத் தேவை பொது எதிரி’ என்பது இயற்கையின் நியதி. அது எமக்கு விதிவிலக்கல்ல. இந்த அரசின் அடக்குமுறைகளையும் அழுத்தங்களையும் தாங்கித்தாங்கி இனிமேலும் முடியாது என்ற நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். அவர்கள் எதிர்வரும் தேர்தலில் ஓரணியில் திரளும்போது கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட மேலும் சிறப்பானதொரு பாடத்தை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இமாலய வெற்றி உங்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும்.

உங்கள் (ராஜபக்சக்களின்) ஆட்சியில் தமிழர்களின் மீது அளவற்ற அடக்குமுறைகள் தற்போதும் வலிந்து திணிக்கப்படுகின்ற என்பதற்கு சர்வதேசத்துக்குத் தேவைப்படும் சாட்சியாகவும் அது அமையும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களையும் பெறுவதற்காகப் பாடுபடும் இந்த அரசுக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றிதான் சொல்ல வேண்டும்.

இந்த அரசு ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். அடக்குமுறைகள் அதிகரிக்கும் ஒவ்வொரு கணமும் அதை உடைத்தெறியும் ஓர்மம் இயல்பாகவே மனிதர்களுக்குண்டு, அந்த ஓர்மம் தமிழர்களுக்கு இன்னும் அதிகமாகவே உள்ளது. நீங்கள் என்னதான் எம்மீது இப்படியான திணிப்புக்களை மேற்கொண்டாலும், அவை எவ்விதத்திலும் அரசுக்குப் பயனளிக்கப்போவதில்லை என்பதே திண்ணம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *