காலையில் பிரசவம் மாலையில் கல்யாணம் முடித்த கல்லூரி மாணவி

திண்டிவனம்: திண்டிவனம் அருகே திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான கல்லூரி மாணவிக்கு காலையில் குழந்தை பிறந்த நிலையில் மாலையில் காதலனுடன் திருமணம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகள் கோகிலா(20). இவர் தனியார் கல்லூரியில் பிஏ (ஆங்கிலம்) இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த செங்கேணி மகன் பரமசிவம்(25), என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கோகிலா கர்ப்பமானார். கர்ப்பமானதை வீட்டில் சொல்ல பயந்துபோன கோகிலா கர்ப்பத்துடன் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். நிறைமாத கர்ப்பினியான நிலையில் நேற்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கல்லூரி மாணவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.   திருமணமாகாமல் குழந்தை பெற்றது தொடர்பாக மருத்துவமனையிலிருந்து ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்பு திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.  மருத்துவமனையில் இருந்த  கல்லூரி மாணவி  கோகிலா குழந்தையுடன் காவல் நிலையத்திற்கு வந்தார். கடவம்பாக்கத்தில் இருந்த பரமசிவத்தையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பரமசிவம் கோகிலாவை திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதித்தார். அதன்படி திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் நேற்று மாலையில் கோகிலாவிற்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *