காணாமல் ஆக்கப்பட்டோர் வேண்டுமெனில் அவர்களை மண்ணுக்குள் தோன்டி தான் எடுக்க வேண்டும்
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் எனக் கூறப்படுபவர்கள் எவரும் இன்று உயிருடன் இல்லை. அவர்களின் உயிரிழப்புக்கு ராஜபக்சக்கள் பொறுப்பு அல்ல. இதற்கு விடுதலைப்புலிகள்தான் முழுப் பொறுப்பு. இப்படியான நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் வேண்டுமெனில் அவர்களை மண்ணுக்குள்தான் தோண்டி எடுக்க வேண்டும்.”
– இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மாநாடு நெருங்குகின்ற வேளையில், வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கோஷங்களும் வலுப்பெறுகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ராஜபக்சக்கள்தான் பொறுப்பு என்ற விதத்தில் அவர்களின் கோஷங்கள் அமைகின்றன.
இப்படிக் கோஷங்களை எழுப்பவதாலோ அல்லது ஐ.நா. சென்று முழங்குவதாலோ அல்லது சர்வதேச விசாரணையை நடத்துவதாலோ காணாமல் ஆக்கப்பட்டோரை உயிருடன் மீட்க முடியாது. அத்துடன் ராஜபக்சக்களையும் பொறுப்புக்கூற வைக்க முடியாது.
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் உயிரிழந்து விட்டார்கள் எனவும், இதற்கு விடுதலைப்புலிகளே பொறுப்பு எனவும் ராஜபக்ச தரப்பினர் ஏற்கனவே அறிவித்து விட்டார்கள்.
தற்போது, காணாமல் ஆக்கப்பட்டோரும் உயிருடன் இல்லை. விடுதலைப்புலிகளின் தலைமையும் உயிருடன் இல்லை. எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் வேண்டுமெனில் அவர்களை, அவர்களின் உறவுகள் மண்ணுக்குள்தான் தோண்டி எடுக்க வேண்டும்” – என்றார்.